சனி, 27 அக்டோபர், 2018

மாணவர்களின் அரசியல் செயல்பாடு குற்றமா?
 ( ச.பாலமுருகன்)

கோயமுத்தூர் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.ஏ. வரலாறு பயிலும் மாணவி எஸ்.மாலதி என்பவர் கடந்த 28.9.2018 அன்று கல்லூரி வளாகத்தில் விடுதலைப் போராட்ட வீரர் தியாகி பகத் சிங் பிறந்த நாள் கூட்ட்த்தை பிற மாணவர்களைக்கூட்டி நட்த்தியதாகவும் எனவே அந்த மாணவியின் செயல் ஒழுங்கீனம் என முடிவு செய்து அவரை விசாரணை அறிக்கை பெறும் வரை இடை நீக்கம் செய்வதாக அந்த கல்லூரி முதல்வர உத்தரவிட்டார். அந்த உத்தரவின் நகல் ஒன்றை அப் பகுதி
 காவல்துறை ஆய்வாளருக்கும் ஆய்வாளருக்கும் அனுப்பியது கல்லூரி. பின்னர் அந்த மாணவி தற்போது மீண்டும் எச்சரிக்கப்பட்டு கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நமது கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் எது போன்ற ஒரு செயல்பாடுகளை நோக்கி முன்னேறுகின்றது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு. மாணவர்கள் நாட்டுப்பற்றும் ,சமூக அக்கரையும் பெற்று விடக்கூடாது என்பது ஒரு புறம் , மற்றொன்று பகத் சிங் போன்ற தலைவர்களை மாணவர்கள் அறியக்கூடாது என்ற அரசியல் மறுபுறம். மேலும் இவையின்றி மாணவர்கள் ஆளும் ஆட்சிக்கு எதிராக ஒன்று சேராமல் இருக்க கல்லூரியில் காவல்துறை கண்காணிப்பு இருக்கின்|றது அல்லது காவல்துறை அறிவுறுத்தல் இதன் பின்னனியில் உள்ளது என்பதன் வெளிப்பாடாய் மாணவியின் இடைநீக்க நகல் அப் பகுதி காவல்துறை ஆய்வாளருக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படுள்ளது.

கல்லூரிகள் வெறும் ஏட்டு கல்வியை மட்டும் பெறும் இடமல்ல சுதந்திர சிந்தனை ,பொது அறிவு, நாட்டுப்பற்று மற்றும் மக்களின் சனநாயக உரிமை சார்ந்த உணர்வுகளையும் பெறும் இடமாகும்.கல்வி வளாகத்தில் நடைபெறும் ஆரோக்கியமான பொது உரையாடல் நல்ல சமூகத்தை உருவாக்க வல்லது. அதுவும் வரலாற்றுப்பாடத்தை முதுகலைப்பிரிவில் படிக்கும் மாணவி பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடியது குற்ற செயல் என கருதும் மனநிலை நமது கருத்துரிமைக்கு விடப்பட்ட பெரும் அச்சுறுத்தல் ஆகும். மேலும் வெறுப்பு அரசியலின் மற்றுமொரு வடிவமும் ஆகும்.

சில ஆண்டுகளுக்கு முன் விடுதலைப்போராட்ட தியாகி இலட்சுமண அய்யர் பற்றிய ஆவணப்படம் எடுக்க அவரின் சம காலத்தவரான பவானியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் தியாகி நல்லசாமியை பேட்டி எடுத்தோம். அவர் தன் நேர் காணலில் அவர்1930 களில் கல்லூரியில் படிக்கும் போது நிகழ்ந்த ஒரு நிகழ்வை நினைவு கூர்ந்தார். சென்னை லயோலா கல்லூரியில் படித்த சமயம் பேராசிரியர்கள், முதல்வர் என ஆங்கிலேயர்கள் இருந்த சமயம் ஒரு கூட்டம் நடைபெற்ற போது திரண்டிருந்த மாணவர்கள் எல்லோரும் தங்கள் சட்டை பைகளில் மறைத்து வைத்திருந்த காந்தியின் குல்லாவை திடீரென ஒரு சேர எடுத்து அணிந்து கொண்டதையும், அது ஆங்கிலேயருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதையும் குறிப்பிட்டார். தடை செய்யப்பட்ட காந்தி குல்லாவை மாணவர்கள் அணிவது அந்நாளில் கல்லூரியை பொருத்து குற்றம் என்ற போதும் ஆங்கிலேயர்கள் அதை தேச விடுதலை போராட்டத்தின் பாதிப்பு கல்லூரிக்குள்ளேயும் இருக்கும் என அமைதியாக ஏற்றுக்கொண்டிருந்தனர். விடுதலைப்போராட்ட்த்தில் 1920 ஒத்துழையாமை இஅய்க்கத்தின் போது பல மாணவர்கள் கல்லூரிகளை புறக்கணித்து விடுதலை போராட்ட்த்தில் பங்கேற்றனர். 1930 சட்டமறுப்பு இயக்கம் பல மாணவர்களை தேச தலைவர்களாக அடையாளப்படுத்தியது. இதன் பின்ன்னியில் 1936 ஆண்டு அணைத்திந்திய மாணவர் பெருமன்றம் உதயமானது.அதே போன்று 1940 வெள்ளையனே வெளியேறு இயக்கம் மாணவர்களை தேச விடுதலையில் சிறைவாசம் என்ற தியாகத்தை செய்ய தூண்டியது. விடுதலைக்கு பின் நாட்டின் சனநாயகத்திற்கு பெரும் ஆபத்தாய் கருதப்பட்ட 1975 நெருக்கடி நிலை சமயம் பல மாணவர்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடினர். டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் சிறையில் வாடினர். டெல்லி பல்கலைக்கழக மாணவ தலைவர் உட்பட பல மாணவர்கல் பெரும் சித்தரவதையை எதிர்கொண்டனர். கேரளத்தில் இராஜன் என்ற பொறியியல் மாணவர் மர்ம்மாக கொல்லப்பட்டார். நெருக்கடி நிலையை எதிர்த்த்தாலும் மாற்று அரசியலை முன் வைத்த்தாலும் பல மானவர்கள் உயிர் தியாகம் செய்தனர். இந்திய சமூகத்தில் அரசியல் சிந்தனையிலிருந்து மாணவர்களை பிரித்து பார்க்க முடியாது.

அரசியல்   நாடு விடுதலையடைந்து இவ்வளவு காலத்திற்கு பின்பு விடுதலை வீரரான பகத் சிங்கை நினைப்பது குற்ற செயலாகவும் ஒழுங்கீனமாகவும் கருதும் குறிப்பிட்ட கல்லூரி நிர்வாகத்தில் உள்ள கல்வியாளர்களின் அறிவு மட்டம் மற்றும் காவல்துறைக்கு அதனை தெரியப்படுத்தும் செயல் ஆகியவை அவர்கள் கல்வி விதிகளுக்கு புறம்பாக அடக்குமுறை நிர்பந்தங்களுக்கு உட்பட்டு செயல்படுவதாகவே கருத முடிகின்றது. அடிமை இந்தியாவைக் காட்டிலும் கார்பரேட்டுகளின் செல்வாக்கு பெற்ற இந்தியா சுதந்தரமற்றதாய் மாறி வருகின்றது.

இது குறிப்பாக கல்வியை வியாபார பொருளாகவும், அதை திறந்த சந்தை மற்றும் போட்டிக்கு களமாகவும் மாற்றும் தாராள பொருளாதார கொள்கையின் வெளிப்பாடு. கல்விக்கூடங்களில் மத அரசியலை புகுத்துவது என்ற செயல்பாடுகளின் பின்னனியில் தொடர்ந்து கல்விக்கூடங்களில் அதன் சுதந்திர சிந்தனைக்கு பின்னடைவு வந்துள்ளது. அச்சமின்றி , கண்ணியத்துடன் கல்வி பயிலும் நிலையை கல்விக்கூடங்கள் ஏற்படுத்த வேண்டியது அடிப்படை கடமை. .ஆனால் மாணவர்களை அரசியலற்றவர்கலாக (depoliticisation ) செய்வதையும் அதை நோக்கி மொத்த கல்வி பண்பாட்டு சூழலை நகர்த்துவதிலும் அதற்க்காக கல்வி வளாகத்திற்குள் கட்டுப்பாடு, காவல்துறையின் அடக்கு முறை, சுதந்திர சிந்தனையை குற்ற செயலாக கருதுவது தண்டிப்பது மேலும் முன்னனி செயல்பாட்டாளர்களை தண்டிப்பதன் மூலம் பிற மாணவர்களை அச்சுறுத்துவது, முற்போக்கு சிந்தனையை தடுப்பது என சனநாயக பண்புகளுக்கு கல்லூரிகளில் திட்டமிட்ட அச்சுறுத்தல் நிகழ்ந்து வருகின்றது. ஒரு வகையில் இந்த செயல்பாடு வெறுமனே மாணவர்களை அரசியல் அற்றவர்களாக மாற்றுவதல்ல, மாறாக அவர்களை சாதிய, மதவாத வலதுசாரி அரசியல் நோக்கி திசை திருப்பும் முயற்சி. இது கல்வி கூடத்தை மட்டுமல்ல ,கல்வி சூழலையும் சீரழித்துவிடும் அரசியல் செயல்பாடு ஆகும்.

நாடு முழுதும் கல்வி மீது நடத்தப்படும் தாக்குதலின் ஒரு வடிவமே கல்வி பயிலும் மாணவர்களை அரசியல் சிந்தனையற்றவர்களாக மாற்றுவது. அது போன்ற சூழலில் உருவாகும் மணவர்கள் எதிர்காலத்தில் நாட்டில் நிலவும் எந்த கொடுமையையும் எதிர்த்து போராடும் தகுதியற்றவர்களாகவும் அதை ஏற்று கடந்து போகும் மனிதர்களாகவும் மாறுவார்கள்.அவர்கள் தங்கள் சுதந்திர சிந்தனையை இழந்து நிற்பார்கள். சனநாயகத்தை அவர்கள் ஒரு போதும் பாதுகாக்க முன் வரவும் மாட்டார்கள். அது நாட்டை ஏய்ப்பவர்களுக்கும் ,சுரண்டுபவர்களுக்கும் வசதி.

 எனவேதான் சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் பெரியார், அம்பேத்கார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டது.

 கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை அரசு சட்டக்கல்லூரியில் ஆணாதிக்கம் என குறிப்பிட்டு வகுப்பில் உரையாற்றிய மாணவி பிரியா என்பவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கல்விக்கூடங்களில் சுதந்திர சிந்தனை விவாதங்களை உத்திரவாதப்படுத்தாமல் சமூக முன்னேற்றமில்லை

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

சாலைச் சந்திப்புகள், ரயில் நிலைய வாசல்கள், கோயில்கள் என மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் எதிர்ப்படுபவர்களின் தயவை எதிர்நோக்கி இறைஞ்சும் மனிதர்களுக்குச் சமூகம் வைத்திருக்கும் பெயர் பிச்சைக்காரர்கள். ஒரு நகரின் அழகுக்கு இவர்கள் கரும்புள்ளிகளாகப் பார்க்கப்படுகின்றனர். இவர்கள் எங்கேயிருந்து வந்தார்கள்? இவர்களின் வேர்கள் என்ன?
உணவு, உடை, வீடு என மனிதர்களின் வாழ்வுக்கான அடிப்படையினை இழந்த அந்தக் கரங்கள் யாசிக்கும்போது முகங்களைத் திருப்பிக்கொள்கிறோம். அந்த மனிதர்களைச் சாடுகிறோம் அல்லது நம்மால் என்ன செய்ய முடியும் என வெகு அரிதாய் நொந்துகொள்கிறோம். அந்த மனிதர்களுக்கும் மனிதக் கண்ணியமுண்டா? நமக்குள்ள உரிமைகள் அவர்களுக்கும் உள்ளதா? இவர்களை பிச்சைக்காரர்களாய் அலையவிட்டதில் அரசாங்கத்துக்குப் பொறுப்பில்லையா என்றெல்லாம் நாம் யோசித்துள்ளோமா?
தமிழ்நாட்டில் 1945-ல் பிச்சையெடுப்பதைத் தடைசெய்யும் சட்டம் இயற்றப்பட்டது. அதுபோலவே, நாட்டின் பல பகுதிகளிலும் பிச்சையெடுப்பதற்குத் தடைச் சட்டம் இயற்றப்பட்டது. பொது இடங்களில் யாசகம் கேட்பது அல்லது பாட்டுப் பாடியோ. நடனமாடியோ, வித்தைகாட்டியோ பணம் பெறுவதையும் மற்றும் ஒரு பொருளைக் கெஞ்சி விற்பதையும் பிச்சை எடுத்தல் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம் 2013 கீழ் பிச்சையெடுப்பவரைப் பிடியாணை இல்லாமல் கைதுசெய்யலாம். விசாரணையின்றி சிறை அல்லது முகாம்களில் அடைக்கும்வகையில் சட்டங்களைக் கடுமையாக்கியுள்ளது அரசு.
உடல் பாதிப்பு காரணமாய் பிச்சையெடுப்பவர்கள், பிச்சையெடுக்கும் தொழிலைச் செய்பவர்களின் பிடியில் சிக்கிக்கொண்டவர்கள், வாழ வேறு வழியற்றவர்கள், பிற பழக்கங்களால் வேலைக்குச் செல்லாதவர்கள், பிச்சையெடுப்பதை வழக்கமாகக் கொண்ட நாடோடிக் குழுக்கள் எனப் பிச்சையெடுப்பவர்களில் பல வகை உண்டு. குழந்தைகளும் சிறார்களும் இந்த வலைகளில் சிக்கிக்கொண்டவர்களாக உள்ளனர். ஆனால், வறுமையும் நீடித்த புறக்கணிப்பும் இவர்களின் நிலைக்குப் பெரும் காரணங்களாகும்.
பார்வைகள் பலவிதம்
டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன்பு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடந்தபோது, எல்லா பிச்சைக்காரர்களும் வலுக்கட்டாயமாக வேறு பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இவர்களை வெளிநாட்டவர் பார்த்தால் இந்தியாவின் மரியாதை குறைந்துவிடும் என அரசாங்கம் கருதியது.
சில ஆண்டுகளுக்கு முன்பு நகரங்களில் பிச்சை எடுப்பவர்கள் தொல்லை அதிகரித்துவிட்டதாகத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கொன்றில், 1945 ஆண்டு தமிழ்நாடு பிச்சை தடுப்புச் சட்டத்தை தமிழகக் காவல் துறைத் தலைவர் நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பிச்சைக்காரர்கள் சமூகத்தின் பிணி என்பது போன்ற பொது கருத்தாக்கம் சமூகத்தின் பொதுப்புத்தியில் நிறைந்துள்ளது. பல தீர்ப்புகளில் இந்த ஏழைகள் மீதான நீதிமன்றச் சொல்லாடல்களும்கூட வன்மம் நிறைந்ததாகவே இருந்துள்ளது. சாலையோரம் வசிப்பவர்களைச் சமூகத்துக்கு இடையூறு செய்பவர்கள் என்றும், ஆக்கிரமிப்பாளர்கள், ஜேப்படிப் பேர்வழிகள், அராஜகவாதிகள் என நீதிமன்றம் வசைமாறிப் பொழிந்த பல வழக்குகள் உண்டு.
வழிகாட்டும் தீர்ப்பு
மக்களின் அடிப்படை வசதிகள், கல்வி மற்றும் அடிப்படை உரிமைகளை அரசு வழங்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திருந்தபோதும், சமூகப் பொதுப்புத்தியின் வெளிப்பாடு வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது. இந்தச் சூழலில் சமீபத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை வழங்கியது. சமூக ஆர்வலர்கள் ஹர்ஸ் மந்தர், கர்னிக் செளனி ஆகியோர் பிச்சையெடுப்பதை குற்றமாகக் கருதக் கூடாது என்றும் பிச்சையெடுப்பதைத் தண்டிக்கும் பம்பாய் பிச்சை தடுப்புச் சட்டத்தைச் சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரியும் பொது நல வழக்கு தாக்கல் செய்தனர். இவ்வழக்கில் பிச்சையெடுப்பதைக் குற்றச் செயலாகக் கருதக் கூடாது என்றும் பிச்சைக்காரர்களுக்கும் அடிப்படை மனித உரிமை உண்டு அரசு அதனை மதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பிச்சையெடுப்பதற்காக வீதிக்கு வருபவர்கள் யாரும் அதற்காக மகிழ்ச்சியடைவதில்லை, அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்கத் தவறிய நிலையில், உயிர் பிழைக்க வேறு வழியில்லாமல்தான் பிச்சையெடுக்கின்றனர். அவர்களின் நிலையை மாற்ற எதுவும் செய்யாத அரசாங்கம், அவர்களைக் குற்றவாளியாக நடத்துவதை ஏற்க முடியாது. பிச்சையெடுப்பதை வெறுமனே குற்றச்செயல் என முத்திரை குத்துவதன் மூலம் அல்லது அவர்களைச் சிறைப்படுத்துவதன் மூலம் அரசு மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க வேண்டிய கடமையிலிருந்து விலகிக்கொள்கிறது. இது அவர்களின் தனி மனித சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்கிறது டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு.
யார் குற்றம்?
பிச்சையெடுத்த குற்றம் புரிந்ததாகக் கைது செய்யப்பட்டவர்களில் 74% பேர் முறையான பணி எதுவும் அமையப்பெறாதவர்கள். அதில் 45% பேர் வீடற்றவர்கள். கல்வி, வேலை, உணவு, மருத்துவம் என்ற எந்த அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றாமல், வறுமையால் வீதிக்கு வந்த அந்த மக்களைக் குற்றவாளி என முத்திரை குத்துவதற்கு முன் இவர்களின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் சமூகப் பாதுகாப்பையும் வழங்காத அரசும் குற்றவாளியே. அரசமைப்பின் தனிமனித சுதந்திரம் என்பது பாதுகாப்பான, கண்ணியமான வாழ்க்கை வாழ்வதுதான். அது மறுக்கப்படும் மனிதர்களை உரிமை இழந்தவர்கள் எனக் கருதுவதற்குப் பதிலாக, யாசிப்பதாலேயே குற்றவாளியாகக் கருதக் கூடாது என்பது இந்தத் தீர்ப்பின் முக்கிய நோக்கம். மேலும், தன் திறமையைப் பயன்படுத்தி பாடுபவர்கள், ஆடுபவர்கள், வித்தை காட்டுபவர்களையும், பொருட்களை விற்பவர்களையும் பிச்சைக்காரர்களாகச் சித்தரிப்பது சமத்துவ உரிமைகளை மறுக்கும் செயல் எனவும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மேலும், வேறு வழியில்லாத நிலையில் உயிர் வாழ்வதற்காகப் பிச்சையெடுப்பதும்கூட அடிப்படை உரிமையே. இந்தப் பிரச்சினையினை குறுகிய பார்வையில் அணுகாது, சமூகப் பொருளாதார அக்கறையுடன் அரசு அணுக வேண்டும் என்றும் ‘சட்டம் வெறும் மந்திரத் தாயத்தல்ல; அது மக்களின் நம்பிக்கை. ஒரு சட்டம் சட்டவிரோதத்துக்குத் துணைபோகுமென்றால், சமூகநீதி செத்துப்போகும்’ என்ற மறைந்த நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யரின் மேற்கோளையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
- ச.பாலமுருகன், எழுத்தாளர், வழக்கறிஞர்,
தொடர்புக்கு: balamuruganpucl@gmail.com 

படைப்பின் வழி அச்சத்தை உடைப்போம் (ச.பாலமுருகன்)

படைப்பின் வழி அச்சத்தை உடைப்போம்
(ச.பாலமுருகன்) 



சனநாயக சமூகம் என்பது மனித நாகரீகத்தின் ஓர் உயர்ந்த சமூக வடிவம். நாடு இந்த அரசியல் நிலையை அடைய பல தியாகங்களை எதிர் கொண்டு வந்திருக்கின்றது. ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ததால் மட்டும் உருவானதல்ல விடுதலை போராட்டம். அது சுதந்திரம் மற்றும் சம உரிமை என்ற தேவையின் அடிப்படையில் உருவானது. விடுதலை உணர்வு உயிர்களின் அடிப்படையான உணர்வு. எல்லா உயிர்களும் சுதந்திரமான வாழ்வை விரும்புகின்றவையே. அச்சமின்றி கருத்தை வெளிப்படுத்துவது மனித உரிமை சார்ந்தது. உலகலாவிய மனித உரிமை சாசனமும் இதை அங்கீகரிக்கின்றது.

சனநாயக சமூகத்தில் அச்சம் என்ற உணர்வு தவறு செய்யாத மக்களின் உள்ளத்தில் அரசியல் காரணங்களுக்காகவும், ஆட்சியின் பொருட்டும் ஏற்படுத்தப்படுவது. இது ஒருவகை வன்முறை. இந்த வன்முறையானது அடக்குமுறை சட்டத்தின் வழியில் நியாயப்படுத்தப்படுவதும், அந்த சட்டங்களின் வழியில் நீதியின் பெயரால் உரிமை பறிப்பு கட்டமைக்கப்படுவதும் சனநாயகம் என்ற நாகரீக தத்துவத்திற்கு முற்றிலும் முரணானது. ஆனால் ஆட்சி புரிவோருக்கு இந்த அத்துமீறல், அதனால் சாமனியர்களுக்குள் உருவாகும் அச்ச உணர்வு அவசியமானதாக கருதப்படுகின்றது. இந்த அச்சத்தின் மீதே ஆட்சி, அதிகாரம் நடைபெறுகின்றது.

மேலும் மாற்றுக் கருத்துக்கள் என்பது சனநாயக சமூகத்தின் மிக அடிப்படை. ஆனால் மாற்றுக் கருத்து கூறுபவர்கள் குற்றவாளியாக பார்க்கப்படுகின்றனர். அவர்களின் குரல்களை நசுக்க தொடர் முயற்சிகள் எடுக்கப்படுகின்றது. படைப்பாளர்கள், கலைஞர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள் மற்றும் உரிமைகளை நேசிப்பவர்கள் என அனைவரும் அச்சப்படுத்தப்படுகின்றனர்.

காவல்துறையின் அடக்குமுறை முன் எப்போதும் இல்லா அளவுக்கு அதிகரித்துள்ளது. அமைதியாக கூடுவது, வன்முறையின்றி போராடுவது, தங்களின் அரசியல் கருத்துக்கள் வழியே அரசினை பணிய வைப்பது போன்ற செயல்பாடுகளுக்கு தங்களை எதிர்த்தோருக்கு ஆங்கிலேய அரசாங்கம் கொடுத்த இடம் கூட சனநாயக சமூகத்தில் தற்போது இல்லை. காவல்துறையின் அதிகார எல்லைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நீதித்துறை நேரிடையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக இதனை அங்கீகரிக்கின்றது அல்லது காவல்துறையின் அதிகார ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்த முடியாமல் திணருகின்றது. காவல்துறையினர் மக்களுக்கு அடிப்படை உரிமை உண்டு என்பதை ஏற்க மறுத்து தொடர்ந்து அமைதியான வழியில் போராடும் உரிமையினை கூட மறுக்கின்றனர். ஆளும் கட்சினரைத் தவிர அரசாங்கத்தை விமர்சிக்கும் எல்லா பொதுக் கூட்டங்களும் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என தமிழ்நாடு போலீஸ் சட்டம் 30(2) மூலம் தடை விதிக்கப்படுகின்றது. இது வெகு அசதாரண சூழலில் நடைமுறப்படுத்தப்படுவதற்கு புறம்பாக எல்லா நாளும் அசாதாரண நிலை இருப்பதாக காவல்துறை முடிவு செய்கின்றது. ஒரு பொது கூட்டம் நடத்தவோ அல்லது ஆர்ப்பாட்டம் நடத்தக்கூட உயர்நீதிமன்றத்தில் வழக்குபோட்டு அனுமதி பெற வேண்டும் என்பதே தமிழகத்தில் தற்போது எழுதப்படாத விதி. ஆளும் கட்சியினருக்கு சம்மாக உள்ள எதிர் கட்சியினரின் பொதுக் கூட்டங்களும் இதே நிலைதான். நீதிமன்றங்களும் காவல்துறையின் அதிகார மீறலை கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து தடுக்க முயற்சிப்பதில்லை. நூற்றுக்கணக்கான வழக்குகள் வெறும் கூட்டம் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி கேட்டே தாக்கல் செய்யப்படுகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு சில புரட்சிகர சிறு இயக்கங்களுக்கு அனுமதி மறுப்பதை வாடிக்கையாகவும், எழுதப்படாத விதியாக காவல்துறை கடைபிடித்து வந்ததை சனநாயக பார்வையில் வெகுசன இயக்கங்கள் தட்டி கேட்க தவறியதன் விளைவு தற்போது எதிர் கட்சிக்கே அந்த நிலை. அரசாங்கத்திற்கு அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவேண்டிய கடமை உள்ளது என்பதை அவர்கள் மறந்து பல வருடங்களாகிவிட்டது.
நமது சமூகத்தில் ஒரு முறை ஏதோ காரணங்களுக்காய் உள்ளே வந்த கொடுங்கோன்மை மற்றும் அடக்குமுறை திரும்ப வெளியேற்றப்பட்டதாக நடைமுறை இல்லை. அது சில சமயம் நீரு பூத்த நெருப்பாய் இருக்கும். தேவைப்படும் போது அது தன் கோரத்தை வெளிப்படுத்தும். கடந்த காலத்தில் ரோமபுரி சாம்ராஜ்ஜியத்தில் இருந்த சனநாயக வடிவிலான அரசு வீழ்ந்து சர்வாதிகாரம் தலைதூக்க கி.மு 67ஆம் ஆண்டு மத்திய தரைப்பகுதியில் இருந்த அமைதியின்மையை சரி செய்ய அதிக அதிகாரத்தை வழங்கிய சட்டமான lex Gabinia தளபதியாக இருந்த பம்பி மேக்னஸ் என்பருக்கு வழங்கப்பட்டது.

போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்கிய பின் அங்கு அமைதி நிலவியதாக கருதப்பட்டது. ஆனால் அது தற்காலிகமானது. அதன் பின் சிறு காலத்தில் நிரந்தர அமைதியின்மை ஏற்பட்ட்து. சனநாயக என்ற அமைப்பு முடிவுக்கு வந்து சர்வாதிகாரிகளின் பிடியில் ரோம சாம்ராஜ்ஜியம் வீழ்ந்தது.

இந்திய வரலாற்றில் 1975 ஆண்டுகளில் நெருக்கடி நிலை அதிகார அத்துமீறலின் உச்சமாயிருந்தது. அந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட பல அடக்குமுறைகள், சித்தரவதை மற்றும் சட்ட வடிவங்கள் நெருக்கடி நிலை கடந்த பின்னும் நிரந்தரமாக நிலைத்துவிட்டது. பஞ்சாப்பில் தீவிரவாதம் என கூறி கொண்டு வரப்பட்ட தடா சட்டம் எல்லோரையும் துன்புறுத்தியது. பல அப்பாவிகள் பல வருடம் விசாரணைக் கைதியாக சிறைபடுத்தப்பட்டனர். சிறுபான்மையினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தடா சட்டத்திற்கு எதிராக மக்கள் போராடி அதை நீக்கச் செய்தனர். ஆனால் ஒரு சில ஆண்டுகளில் பொடா சட்டம் வந்தது. தடா சட்டத்தின் எல்லா வடிவங்களையும் பொடா பெற்றிருந்தது. மீண்டும் கருத்துரிமை பெரும் பின்னடைவை சந்தித்தது. மீண்டும் அத்துமீறலுக்கு முழு சமூகம் உள்ளாகி திரும்பவும் பொடா சட்டத்தையும் நீக்கவேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.

கடந்த 2004 செப்டம்பர் மாதம் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரண்டு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. ஒன்று, பொடா சட்டத்தை திரும்ப பெறுவது. மற்றொன்று, பொடா சட்டத்தின் எல்லா சரத்துக்களையும் அப்படியே சட்டத்திருத்தம் வழியாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் 1967ல் புகுத்தி விடுவது. பழைய சட்டத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர் என குற்றம் சாட்டும் நிலை இருந்தது தற்போதைய சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்ட்த்தில் அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட வாய்ப்புள்ளதாக கருதும் சமயம் கூட ஒரு இயக்கத்தை தடை செய்யலாம். சம்பந்தப்பட்டவரை கைது செய்து ஆறு மாதங்கள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாமல் சிறைப்படுத்தலாம். நாடு முழுதும் பல அரசியல் செயல்பாட்டாளர்கள் இந்த சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். உடல் ஊனமுற்ற டெல்லி பேராசிரியர், சாய்பாபாவிலிருந்து தற்போது நாட்டின் பல பகுதிகளில் கைது செய்யப்பட்ட சமூக செயல்பாட்டாளர்கள் வரை இந்த பட்டியல் தொடர்கின்றது.

அரசாங்கத்தின் செயல்பாடுகள் சட்டமன்றம், பாராளுமன்றம் போன்ற விவாதங்களின் மூலம் முடிவெடுக்கப்படுவதற்கு மாறாக தனி நபர் விருப்பு சார்ந்து ஆட்சியாளர்கள் முடிவு செய்யும் நிலை உள்ளது. பல்லாயிரம் கோடி பணமதிப்புள்ள திட்டங்கள் இது போன்றே மக்களவைக்கு அப்பால் விவாதமின்றி முடிவுசெய்யப்படுகின்றது.

இந்த திட்டங்களால் வாழ்வாதாரத்திலிருந்து விரட்டப்பட்டு பாதிக்கப்படும் மக்கள் போராடும் சூழலில், அவர்கள் போராடும் தேதி, இடம், கூடும் மக்கள் எண்ணிக்கை அல்லது அவர்கள் பேச்சு எதை நோக்கி இருக்கவேண்டும், எப்படி வெளிப்பட வேண்டும் என முடிவு செய்வதும் அல்லது பேசிய பின் அந்த பேச்சோ அல்லது படைப்போ குற்றமா? இல்லையா? என எல்லாம் காவல்துறையினர் முடிவு செய்யும் நிலை உள்ளது.

கதை எழுதியவர்கள், கட்டுரை எழுதியவர்கள், மேடையில் அரசாங்கத்தை விமர்சித்து பேசியவர்கள் அல்லது "பாசிச பாஜக ஒழிக" என கோசமிட்டவர்கள், பத்திரிக்கையாளர்கள் என எல்லோரும் குற்றவாளிகள். சிறை என்ற ஒன்று அவர்களுக்கு எப்போதும் காத்திருக்கின்றது.

கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் ஆனாதிக்கம் என பேசியதற்காகவும், பக்த்சிங் பிறந்த நாலை கொண்டாடியதற்காகவும் மாணவர்கள் நீக்கப்படுகின்றனர். பேசாதே! என அரசாங்கம் சொல்லுகின்றது. இந்த அடக்குமுறை வழியாக பெரும் அச்ச உணர்வு கடமைக்கப்படுகின்றது. சமூகத்தை நேசிப்பவர்கள் முன்னோடி சக்திகள், உரிமை செயல்பாட்டாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என எல்லோரும் எப்போதும் அச்சத்துடன் இருக்க வேண்டும் என அரசாங்கம் கருதுகின்றது.

இந்த அடக்குமுறையை கடந்த காலங்களில் எதிர் கொண்டே சமூக போராட்டங்கள், விடுதலைப் போராட்டங்கள் நடந்துள்ளன. அச்சத்தை கண்டு அச்சப்படுவது தீர்வல்ல. அதை நேருக்கு நேராய் எதிர் கொள்வதே தீர்வு. சமூக அக்கரையுடன் உரக்க பேசுவதும், அச்சமின்றி எழுதுவதும், நமது கலை ஆக்கங்களை உருவாக்குவதும் தீர்வு. சமூகத்தை நேசிப்பவர்கள் பொது தளத்தில் சனநாயக பண்புகளைக் காக்கவும் அடக்குமுறையை எதிர்க்கவும் இணைந்து பணியாற்றுவதும் அவசியம்.

சனநாயகம் என்ற பரந்த பன்முகத்தன்மை வாய்ந்த அமைப்பில் அதன் உயிர்ப்பு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அதனை மீட்பதும் மக்களின் சுதந்திரச் சிந்தனை செயல்பாடுகளுக்கு உத்தரவாதப்படுத்தவும், அரசின் கொடிய அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து ஒன்றுகூடி எழுந்து நிற்பதும் அதன் அதிகாரத்துவத்தை கேள்விக்குள்ளாக்குவதும் இன்றைய முக்கிய தேவை.
*
19.10.2018 சென்னையில். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நிகழ்த்தவுள்ள படைப்பாளர்கள் கலைஞர்கள் அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுகூடும் நிகழ்வுக்கு எமது தோழமையையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்.

- ச.பாலமுருகன்.

Image may contain: Bala Murugan, text